செவ்வாய், 11 ஜனவரி, 2011

திருவைந்தெழுத்து

சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர்.
யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் ருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது.

திருவைந்தெழுத்து விளக்கம்


திருவைந்தெழுத்து விளக்கம்
திருவைந்தெழுத்தான நமசிவாய இலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவப் பொருளுடையவை.
  • ந - திரோத மலத்தையும்,
  • ம - ஆணவ மலத்தையும்,
  • சி - சிவமயமாயிருப்பதையும்,
  • வா - திருவருள் சக்தியையும்,
  • ய - ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.
இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும்.

திருவைந்தெழுத்து ஓதுவதன் பயன்கள்

ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்.

திருவைந்தெழுத்தின் சிறப்புக் கூறும் இலக்கியங்கள்

  • "சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
  • "கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
  • "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்

கருத்துகள் இல்லை: